ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கடை உரிமையாளரும், காஷ்மீர் பண்டிட்டுமான மாக்கன் லால் பிந்துருவை நேற்று மாலை அவரது கடையில் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல், ஸ்ரீநகரின் ஹவால் பகுதியில் பானிபூரி விற்கும் வியாபாரியை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அடுத்த சில நிமிடங்களில் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ளூர் டாக்சி நிறுத்த தலைவர் மொகமது ஷபி லோன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு மணி நேரத்தில் பயங்கரவாதிகள் நடத்திய மூன்று தாக்குதலில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.