தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
செல்வராகவன்- தனுஷ் கூட்டணிக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. தற்போது மீண்டும் இருவரும் 'நானே வருவேன்' படத்திற்காக இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். யோகிபாபு, இந்துஜா ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். 'நானே வருவேன்' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நடிகை எல்லிஅவர்ராம் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. செல்வராகவன் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனுஷ் இதைத் தெரிவித்துள்ளார்.
விரைவில் படத்திலிருந்து பல சுவாரசியமான அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
